அதிராமபட்டினம் அருகே இந்து, முஸ்லீம் மோதல் - பதட்டம் - போலீசார் குவிப்பு
தஞ்சை: தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினத்தில் கோவில் வழிபாடு குறித்து இந்து - முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டதால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.
தஞ்சை மாவட்டம், அதிராமபட்டினம் அருகே உள்ளது புதுப்பட்டினம் கிராமம். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் சம அளவில் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தின் மையப் பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது. அதன் அருகிலேயே சுமார் 100 மீட்டர் தூரத்திற்குள் இஸ்லாமியர்கள் வழிபாடுத்தலமான பள்ளிவாசல் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவில் விவகாரம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இந்துக்கள் சிலர் அந்த பகுதியில் இந்து முன்னணி கூட்டம் நடத்தி கொடி ஏற்றினர். அது போலவே, இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்பு கூட்டம் நடத்தி கொடி ஏற்றினர்.
இதில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இந்து முன்னணியின் கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி சாய்த்தனர். இது குறித்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த போது இந்துக்களை சிலர் தாக்கியதாகவும், வாகனங்களை சேதப்படுத்தியுதாகவும் கூறப்படுகின்றது.
இதில் படுகாயம் அடைந்த ரவி, ராஜ்குமார், சுப்பையன் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இந்து முஸ்லீம் கலவரம் வெடித்துள்ளது. இதனைத் தடுக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications