தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்
மதுரை: தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக தற்போது தமிழகத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் ஆணையம் முதன்முறையாக கல்லூரி மாணவர்களை அழைத்துள்ளது. அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்டாப்புடன் இணைந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றை இயக்க பி.இ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டத்தை மதுரை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மட்டும் 555 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 4 கல்லூரிகள் தங்களது மாணவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த பட்டியல் கொடுத்துள்ளன.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
லேப்டாப் கண்காணிப்பு கேமராவை இயக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அல்லது கல்லூரி மாணவர்களை பணியாற்ற தேர்வு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தான் கல்லூரி மாணவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.