திருச்சியில் இன்று முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஒரே நாளில் பிரசாரம்
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக வேட்பாளர்களும், அதிமுக, தேமுதிக வேட்பாளர்களும் மனுத் தாக்கலை முடித்து விட்டனர். இதையடுத்து பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் திருவாரூரில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ஜெயலலிதா நேற்று திருச்சியில் தொடங்கினார். விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கினார்.
முதல்வர் கருணாநிதி நேற்று தஞ்சாவூகரில் நடந்த கூட்டத்தில் பேசினார். இன்று திருச்சியில் அவர் பேசுகிறார். இதற்காக தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
அதேபோல ஜெயலலிதாவும் இன்று திருச்சி கருமண்டபம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பேசவுள்ளார். ஒரே சமயத்தில் இரு பெரும் தலைவர்களும் திருச்சியில் பேசவுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
போலீஸார் பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தீவிர வாகனச் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் மூண்டு விடாமல் நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செஞ்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார்.