டெல்லி விரைந்த இக்பால் சிங் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு
டெல்லி: டெல்லி விரைந்துள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் பதவி விலகுவார் என்ற செய்தி மேலும் உறுதியாகியுள்ளது.
கருப்புப் பண முதலை அசன் அலி விவகாரத்தில் சிக்கியுள்ளார் இக்பால் சிங். அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அப்போது எம்.பியாக இருந்த இக்பால் சிங் பரிந்துரைத்தது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவரை விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை பிரதமர் அலுவலகம் வழங்கியது. இதையடுத்து புதுவை வந்து ஆளுநர் மாளிகையில் வைத்து இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 3 முறை விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேற்று 6 பேர் கொண்ட மும்பை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்து வீடியோ கான்பரன்சிங் வசதியை ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
விசாரணை முடிவடைந்த நிலையில் உடனடியாக நேற்று இரவே இக்பால் சிங் டெல்லி கிளம்பிப் போனார். இதனால் அவர் ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார் இக்பால் சிங்.












Click it and Unblock the Notifications