சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை நிறுத்த வேண்டாம்: அரசுக்கு கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை
சென்னை: சமச்சீர் கல்வியை நிறுத்திவிடாமல் இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பாமக, மார்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட மாட்டாது என்ற ஜெயலலிதா அமைச்சரவையின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்ற முடிவு தேவையற்றது.
முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக அதை நிறுத்துவது சரியல்ல. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை சரிசெய்வது தான் சிறந்தது. இந்த திட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்த புதிய வல்லுநர் குழு அமைப்பது காலம்தாழ்ந்த நடவடிக்கை.
இதன் மூலம் கல்வியை வியாபாரமாக்கி கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் நிர்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை நிறுத்தும் முடிவால் ஏற்கனவே ரூ. 200 கோடி செலவில் அச்சடித்து வைக்கப்பட்டுள்ள 6.5 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தின்படி புதிய புத்தகங்கள் அச்சிட தேவையற்ற காலதாமதமும், பொருட்செலவும் ஏற்படும்.
மாணவர்களின் நலன் கருதி சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதே போன்று சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை நிறுத்தாமல் இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மாணவர் சங்கம்:
பொதுப்பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று அரசு எடுத்துள்ள முடிவு சரியல்ல. அதை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்திவிட்டு பின்னர் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் குறைகள் உள்ளது என்பதையும், அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் ஏற்கிறோம். ஆனால் அதை அமல்படுத்திவி்ட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த திமுக அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல் வெறும் பொதுப் பாடத்திட்டத்தை மட்டுமே அறிமுகப்படுத்தியது. மக்கள் எதிர்பார்க்கும் சமச்சீர் கல்வியை தற்போதைய அரசு கொண்டு வர வேண்டும்.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:
தற்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்யலாமே தவிர பாடத்திட்டத்தையே நிறுத்துவது முறையன்று.
பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சிடவே 3 மாத காலமாகும். அதுவரை புத்தகமில்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படக்கூடும். எனவே, தமிழக அமைச்சரவை தனது முடிவை மாற்றிக் கொண்டு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:
சமச்சீர் கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைவருக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.