பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி
சென்னை: வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே ஆம்னி பஸ் விபத்துக்குள்ளாகி 23 பேர் பலியான சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், விபத்து குறித்து விவரித்தார். அவர் கூறுகையில், விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய் விட்டனர். அவர்களது அடையாளத்தை டிக்கெட்களை வைத்து காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விபத்தில் பஸ் டிரைவரும், ஒரு பயணியும் உயிர் தப்பியுள்ளனர். இருவரும் மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோருக்கு, அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்துள்ள பயணிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.