கலர் டிவி ஊழல் வழக்கு-மாஜி அமைச்சர் செல்வகணபதி பி.ஏ. திடீர் சரண்
சென்னை: ஊராட்சிகளுக்கு கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் இதுவரை தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் உதவியாளர் விஜயக்குமார் என்பவர் இன்று திடீரென சிபிஐ கோர்ட்டில் சரணடைந்தார்.
தான் இத்தனை காலமாக வெளிநாட்டில் இருந்ததால் வழக்கு குறித்தே தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 1991-96ல் ஆட்சிப் பொறுப்பில் அதிமுக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது ஊராட்சிகளுக்குக் கலர் டிவி பெட்டிகள் வழங்கப்பட்டன. அதில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த சமயத்தில் திமுகவுக்குத் தாவினார் செல்வகணபதி. அதைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ கோர்ட் அவர்களை விடுவித்து விட்டது.
இருப்பினும் செல்வகணபதியின் உதவியாளர் விஜயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று விஜயக்குமார் திடீரென சிபிஐ கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இத்தனை நாட்களாக நான் வெளிநாட்டில் இருந்தேன். எனவே எனக்கு வழக்கு குறித்துத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
விஜயக்குமார் கடந்த 15 வருடங்களாக தலைமறைவாக இருந்ததால் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் சரணடைந்து விட்டதைத் தொடர்ந்து சிபிஐ கோர்ட் வாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.