சோனியாவின் வெளிநாட்டுப் பயணங்கள்: பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு!
டெல்லி: சோனியா காந்தி எத்தனை முறை வெளிநாடு போய் வந்தார் என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியானா மாநிலம் ஹிஸ்சார் நகரத்தை சேர்ந்த ரமேஷ் வர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு மனு செய்திருந்தார். கடந்த ஆண்டு (2010) பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பெறப்பட்ட அந்த மனுவில், தேசிய ஆலோசனைக் குழு தலைவர் சோனியா காந்தி கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்? அவரது வெளிநாட்டு பயணங்களின் நோக்கம் என்ன? அதற்கான செலவுகள் எவ்வளவு? அவரது வெளிநாட்டு பயணங்களால் என்ன பலன் ஏற்பட்டது? என்ற விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
பிரதமர் அலுவலகம் இந்த மனுவை அதே ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. வெளியுறவுத்துறை அமைச்சகம் 10 நாட்களில் (26-ந் தேதி) அந்த மனுவை பாராளுமன்ற விவாகரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.
இதைத்தொடர்ந்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள பதிலில், கடந்த 10 ஆண்டுகளில் சோனியாகாந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்காக மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை என்று தெரிவித்து உள்ளது.
மத்திய தகவல் ஆணையர் சத்தியானந்த மிஸ்ரா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் மனுக்களை சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு பிரதமர் அலுவலகம் நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், சோனியாகாந்தியின் வெளிநாட்டு பயண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்," என்றும் தெரிவித்து உள்ளார்.