பீகாரில் மர்ம நோய்க்கு 26 பேர் பலி: மக்கள் பீதி
முசாபர்பூர்: பீகாரில் மர்ம நோயக்கு இன்று 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். அவர்களையும் சேர்த்து மர்ம நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26-க உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் மர்ம நோய் பரவி வருகிறது. இதற்கு ஏற்கனவே 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
3 குழந்தைகள் கேஜ்ரிவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். ஒருவர் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் இழந்தார். இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் சுமார் 30 குழந்தைகள் இந்த மர்ம நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.
தலைநகர் பாட்னாவில் இருக்கும் மலேரியா ஆராய்ச்சி மையத்தில் இருந்து நிபுணர்கள் குழு முசாபர்பூர் விரைந்துள்ளது. அவர்களை மாநில சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது என்று அதன் தலைமைச் செயலர் அமர்ஜீத் சின்ஹா தெரிவித்தார்.
அந்த குழு ரத்த மாதிரிகளை பூனேவுக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே இது என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க மத்தியில் இருந்து ஒரு மருத்துவ நிபுணர்கள் குழுவை உடனே அனுப்பி வைக்குமாறு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் வலியுறுத்தியுள்ளார்.