12 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்: தமிழகத்தில் 1 இடத்துக்கு போட்டி
தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்தார். அவரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தத் தேர்தலில் வென்ற அவருக்கு அமைச்சர் பதவியும் தந்துவிட்டார். இதையடுத்து தனது எம்பி பதவியை ராமலிங்கம் ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதே போல மகாராஷ்டிர முதல்வரான பிருதிவிராஜ் சவானும் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்தப் பதவிக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமத் படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சீதாராம் யெச்சூரி, பிருந்தா கரத், புரட்சி சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த அபானி ராய் உள்பட மேற்கு வங்காளம், குஜராத், கோவா, மாநிலங்களைச் சேர்ந்த 10 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது.
இதையடுத்து 12 காலி இடங்களுக்கு அடுத்த மாதம் 22ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும்.
அன்றைய தினமே மனு தாக்கலும் தொடங்கும். மனு தாக்கல் செய்ய 12ம் தேதி கடைசி நாள் ஆகும். மறுநாள் 13ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கும்.
15ம் தேதி மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால், 22ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். அன்றே ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.
புதிதாகத் தேர்வு செய்யப்படும் இந்த 12 எம்பிக்களின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஜுன் 25 வரை இருக்கும்.
தமிழக சட்டசபை பலத்தின்படி ராமலிங்கத்துக்குப் பதில் அதிமுக சார்பில் நிறுத்தப்படுபவர் மிக எளிதாக வெல்ல உள்ளார்.