ரூ.10000 கோடி முறைகேடு: என்.எல்.சி. தலைவர் மீது வழக்கு-சிபிஐக்கு உத்தரவு
சென்னை: என்எல்சி நிறுவனத்தில் ரூ 10000 கோடிக்குமேல் முறைகேடு நடக்கக் காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் தலைவர் அன்சாரியை சிபிஐ விசாரிக்க வேண்டும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.எல்.சி. ஊழியர்கள் ஒற்றுமை சங்கத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
"என்.எல்.சியில் நிதி நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் அதன் தலைவர் அன்சாரி, போலி ஆவணங்களைக் கொண்டு தவறான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அதிகார துஷ்பிரயோகத்தால் என்.எல்.சி.க்கு ரூ.10,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி யூசுப் அலி இந்த வழக்கை விசாரித்து, மனுதாரர் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.