வால்பாறையி்ல் குடியிருப்பு பகுதியில் யானைகள், 14 வீடுகள் சேதம்
வால்பாறை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் 14 வீடுகளை இடித்து தள்ளின. அப்பகுதியில் இருந்த விவசாய நிலங்களில் இருந்த பயிர்களையும் நாசப்படுத்தி சென்றது. காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் அதிகளவில் காட்டு யானைகள் வசிக்கின்றன. காட்டு பகுதிகளில் உணவுப் பற்றாகுறை ஏற்படும் போது யானைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பயிரிட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டும் சேதப்படுத்தியும் செல்கின்றன.
வால்பாறையில் உள்ள கவர்க்கல்குடி பகுதியில் ஆதிவாசி குடியிருப்பு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டில் இருந்து வந்த யானைகள் இந்த குடியிருப்புக்குள் நுழைந்தன. அப்போது அங்கிருந்த மோகன் என்பவரை காட்டு யானை ஒன்று தாக்கி படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் தீப்பந்தங்களை கொளுத்தி காட்டி யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர். இந்த நிலையி்ல் 3 காட்டு யானைகள் பிளறல் சத்தமிட்டு கொண்டு அதே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.
இதில் பீதியடைந்த அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு அருகில் இருந்த பள்ளி கட்டத்தில் சென்று மறைந்து கொண்டனர். குடியிருப்பு பகுதியில் இருந்த நாகப்பன், வேலுச்சாமி, சரவணன் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தின. மேலும் சோலார் விளக்குகள், மின் கம்பங்கள் ஆகியவற்றையும் தாக்கி சேதப்படுத்தின. பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த 200ம் மேற்பட்ட வாழைகளை சாப்பிட்டு சென்றன.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர். இந்த நிலையி்ல் நேற்றிரவு 7 யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, 11 வீடுகளையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தின. இதில் பீதியடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காட்டு யானைகள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் குடியிருப்பு பகுதியில் கிடைப்பதால் யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதாக தெரிகிறது. காட்டு யானைகளுக்கு பயந்த பொதுமக்கள், தங்களுக்கு பாதுகாப்பான பகுதியில் தற்காலிக வீடுகள் அமைத்து தருமாறு கேட்டு கொண்டுள்ளனர்.