சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் தன்னை கொல்ல முயன்றாக கணவர் மீது மனைவி புகார்
சென்னை: சிங்கப்பூரில் வசித்து வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால், இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது தன்னை விமானத்தில் வைத்து கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது போலீசாரிடம் மனைவி புகார் தந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீகிருஷ்ணா (35) சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மந்தைவெளியைச் சேர்ந்த சுவர்ணலதாவுக்கும் (27) ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.
திருமணத்துக்கு பின் இருவரும் சிங்கப்பூர் சென்றனர். ஆனால், இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. இதையடுத்து சென்னைக்கு சென்று பெற்றோருடன் கலந்து பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள 3 வாரங்களுக்கு முன் சென்னை திரும்பினர்.
விமானத்திலேயே சுவர்ணலதாவை, கிருஷ்ணா தாக்கியதாகத் தெரிகிறது. விமானம் தரையிறங்கியதும் இது குறித்து சுவர்ணலதா தனது உறவினர்களிடம் கூற, அவர்கள் கிருஷ்ணாவை தட்டிக் கேட்க, கிருஷ்ணாவுக்கு ஆதரவாக அவரது தரப்பினர் வாக்குவாதம் செய்ய விமான நிலையத்திலேயே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிலைய போலீசார் கிருஷ்ணா, சுவர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுவர்ணலதா, போலீசில் புகார் மனு தந்தார். அதில், விமானத்தில் வைத்து கிருஷ்ணா எனது கழுத்தை நெரித்து தாக்கினார். என்னை கொலை செய்ய முயன்றார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகார் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய விமான நிலைய போலீசார், வழக்கை பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர்.
அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி, கணவன்-மனைவிடம் விசாரணை நடத்தியபோது, கிருஷ்ணாவுடன் என்னால் இனி வாழ முடியாது. திருமணத்தின் போது கொடுத்த நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள், எனது சான்றிதழ்கள் ஆகியவற்றை கணவரிடமிருந்து வாங்கிக் கொடுங்கள் என்று சுவர்ணலதா கூறினார்.
இதையடுத்து சுவர்ணலதாவை விட்டுப் பிரிய கிருஷ்ணாவும் சம்மதித்தார். 1 வாரத்தில் பொருட்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுவதாக கிருஷ்ணா எழுதிக் கொடுத்தார்.
ஆனால் மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்ட கிருஷ்ணா, சொன்னபடி சுவர்ணலதாவின் பொருட்களை திருப்பித் தரவில்லை.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சேலையூரில் வசித்து வரும் கிருஷ்ணாவின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது வரும் 14ம் தேதி சுவர்ணலதாவுக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று அவர்கள் எழுதித் தந்ததையடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications