பாக். பிரதமருடன் சந்திப்பு: பேச்சுவார்த்தை திருப்தி-மன்மோகன்
மாலே: சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சந்தித்துப் பேசினார்.
சார்க் உச்சி மாநாடு மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் நடைபெற்று வருகிறது. தெற்காசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசியுள்ளனர். மாலத்தீவின் ஷாங்கிரில்லா ரெசார்ட்டில் உள்ள காட்டேஜ்ஜில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முக்கிய விவாதங்கள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை நுழைந்ததாக அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டது, இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து விஷயத்தில் பாகிஸ்தான் நாடகம் ஆடுவது, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத இயக்கங்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
இருநாட்டு பிரதமர்களும் திருப்தி
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி உடனான பேச்சுவார்த்தை சிறந்த முறையில் அமைந்தது. இரு நாடுகளுக்கிடையேயான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மேலும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இரு நாடுகளுக்கிடையே உள்ள பிணக்குகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பு சிறந்த முறையில் அமைந்தது என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் கூறினார்.
அவர் கூறுகையில், ஐ.நா அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பு நாடாவதற்கு ஆதரவு அளித்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.