சபரிமலை சீசனுக்காக குமுளி மலைப்பாதையை 'ஒன்வே'யாக்க முடிவு
தேனி: சபரிமலை சீசனுக்காக குமுளி மலைப் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேக்கடி வன அலுவலகத்தில் தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண்குமார், இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் 2 மாநில போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிசம்பர் 15ம் தேதி முதல் முதல் ஜனவரி 15ம் தேதி வரை சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாகவும், சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாகவும் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேனி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் வாகனங்கள் செல்லும் வழிகளில் சபரிமலை தொடர்பான வரைபடங்கள் பக்தர்களுக்கு வழங்கவும், குமுளி, கம்பம் மெட்டு, லோயர்கேம்பில் மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் குமுளி மலைப்பாதையில் உள்ள ஆபத்து நிறைந்த வளைவுகளில் மின்விளக்கு வசதி செய்து தரவும், மலைப் பாதையில் பழுது ஏற்படும் வாகனங்களை சீரமைக்க மொபைல் சர்வீஸ் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.