ஹசாரேவுக்கு உண்ணாவிரதத்துக்கு மும்பையில் அனுமதி :15 நாட்களுக்கு 34.80 லட்சம் வாடகை!
மும்பை: ஊழலுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகி வரும் அன்னாஹசாரேவுக்கு மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வலுவான லோக் பால் மசோதாவை நாடளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் வரும் 27 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அன்னா ஹசாரே தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதத்தில் டில்லியில் குளிர் அதிகமாக இருப்பதால், ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டம், மும்பைக்கு மாற்றப்படும் என சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் அனுமதி
இந்த நிலையில், மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், வரும் 27ம் தேதி முதல் 15 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, அன்னா ஹசாரேக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
34.80 லட்சம் வாடகை
30 ஆயிரம் சதுர மீட்டர் அளவு கொண்ட இந்த மைதானத்தில் உண்ணாவிரதம் நடத்த சதுர மீட்டருக்கு ரூ.6.40 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி 15 நாட்களுக்கு அவர்கள் வாடகைக்கட்டணமாக 34லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டும் என்று
மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் இணை திட்ட இயக்குனர் கவாத்கர் தெரிவித்துள்ளார்.