இந்திய கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் அந்தோணி பேட்டி
கொல்லம்: கேரள கடல்பகுதியில் 2 தமிழக மீனவர்கள் இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இந்திய கடல் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அஜீஸ் பிங்கோ, செலஸ்டின் வாலன்டைன் ஆகிய 2 பேர் அவ்வழியே சென்ற இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் சால்வடோர் கிரோன், லதோரா மிசிமினியோனோ ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளான இத்தாலி நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று இத்தாலி அதிகாரிகள் மற்றும் கேரள காவல்துறை அதிகாரிகள் கொல்லம் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற படகை ஆய்வு செய்தனர்.
மேலும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கொல்லத்தில் உள்ள மீனவர் செலஸ்டின வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், இந்திய கடல் பகுதியில் மீனவர்களை பாதுகாத்திட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.