மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் ஜெயலலிதா: அமெரிக்க அமைப்பு பாராட்டு
உலகப் புகழ்பெற்ற அமைப்பான புரூகிங்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த அமைப்பு அரசியல், சமூக, பொருளாதார ஆய்வுகளுக்கு பெயர் போனது. இந்நிலையில் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜே.அந்தோலிஸ் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
புரூகிங்ஸ் இணையதளத்தில் உள்ள அந்த கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள ஜெயலலிதா நிர்வாக ரீதியாக விரைந்து முடிவு எடுப்பவராகவும், மதிநுட்பம் மிக்கவராகவும் உள்ளார்.
மேலும் அரசியல் ரீதியான விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை சினிமா படமாக எடுத்தால் அந்த படங்களுக்கு ஸ்டார் வார்ஸ்-3, மீண்டும் ஜெயலலிதா என்றெல்லாம் பெயரிடலாம்.
தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பது தெரிகிறது. அடிப்படை கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமான நிலையில் உள்ளது. எனவே அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் ஜெயலலிதாவின் அடுத்தக்கட்ட இலக்காக உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால்விலை போன்றவற்றை அவர் உயர்த்தினார். நிதிச் சுமையை சமாளிக்கவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். விலை உயர்வு காரணமாக ஓரளவு வருவாய் கிடைக்கும். அந்த நிதியை தமிழ்நாட்டில் கல்வித்துறையில் முதலீடு செய்ய ஜெயலலிதா உறுதியாக உள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.