சுரங்க ஊழல் வழக்கில் எதியூரப்பா மற்றும் குடும்பத்தினருக்கு முன் ஜாமீன்: கைது இல்லை
பெங்களூர்: சுரங்க ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் உள்ளிட்டோர் மீது சுரங்க ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பெங்களூர், ஷிமோகா ஆகிய இடங்களில் உள்ள எதியூரப்பாவின் வீடுகள், அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள், மருமகன் ஆர். சோஹன் குமாரின் வீடு, மகனின் கம்பெனி, சுரங்க உரிமம் பெற எதியூரப்பா குடும்பத்திற்கு ரூ.20 கோடி கொடுத்த பெல்லாரியில் உள்ள சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என மொத்தம் 8 இடங்களில் கடந்த மாதம் 16ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் எதியூரப்பா, அவரது மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் சிபிஐ நீதி்மன்றம் அவர்களின் மனுக்களை கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுபாஷ் பி. அதி தீர்ப்பை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. சுரங்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதியூரப்பா, அவரது மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையே நில அபகரிப்பு வழக்கில் எதியூரப்பாவும், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணாவும் லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.