ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை காகித ஆலையாக மாற்ற அரசுக்கு கோரிக்கை
விருதுநகர்: ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை காகித ஆலையாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை கடந்த 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ. 2.60 கோடி செலவில் துவங்கப்பட்டது. இங்கு நாள் ஒன்றுக்கு 100 டன் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உற்பத்தியானது. தனியாரால் ரூ.190க்கு விற்கப்படும் ஒரு மீட்டர் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், அரசு ஆலையில் ரூ.130க்கு விற்கப்பட்டது.
அலங்குளம் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள் விலை குறைவு, நல்ல தரம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதன் மூலம் ஆலைக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. குறிப்பாக கேரளாவில் இந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் நமது நாட்டில் கிடைக்கவில்லை. இதனால் ரஷ்யா, ஜிம்பாப்வே, கனடா போன்ற நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை ஆலை நிர்வாகம் இறக்குமதி செய்து வந்தது. இதற்கிடையே பைபர் எடுக்கும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சில நாடுகள் அதன் சப்ளையை நிறுத்திவிட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக பைபர் இறக்குமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உற்பத்திக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதனால் ஆலங்குளம் ஆஸ்பெஸ்டாஸ் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. ஆனாலும் தமிழக அரசு மவுனம் காத்து வருகின்றது.
இந்த நிலையில் ஆலங்குளம் ஆஸ்பெஸ்டாஸ் ஆலையில் ஷீட் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்களில் சிறு மாற்றம் செய்தால் கரூர் மாவட்டம், புகழூரில் உள்ளது போன்ற காகித ஆலை தயாரிக்கும் நிறுவனம் அமைக்கலாம். எனவே, இந்த கோரிக்கையை தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.