மீண்டும் பெங்களூர் திரும்பும் வட கிழக்கு மாநிலத்தவர்!
குவஹாத்தி: தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதியில் அஸ்ஸாம் உள்ளிட்ட சொந்த மாநிலங்களுக்கு அவசரம் அவசரமாக கிளம்பிய வட கிழக்கு இந்தியர்கள் தற்போது மீண்டும் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பெங்களூருக்கு 3 சிறப்பு ரயில்கள் குவஹாத்தியிலிருந்து இயக்கப்படுகிறது.
முஸ்லீம்கள் தாக்கப் போகிறார்கள் என்று சில விஷமிகள் கிளப்பிய வதந்தியால், பீதியடைந்த வட கிழக்கு இந்தியர்கள், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து அவசரம் அவசரமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு கிளம்பியதால் நாடே பரபரப்பானது. அவர்களை சமாதானப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் கோரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. பெங்களூர்தான் பெரும் பரபரப்பைச் சந்தித்த நகரமாகும்.
இந்த நிலையில் தற்போது அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீ்ண்டும் பெங்களூர், சென்னை உள்ளிட் நகரங்களுக்கு வட கிழக்கு இந்தியர்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். அதாவது நிலைமை உல்டாவாகியுள்ளது.
குவஹாத்தியிலிருந்து பெங்களூர் திரும்ப ஆயிரக்கணக்கானோர் காத்துள்ளனராம். இதனால் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது, அப்படி வெளியான செய்திகள் வெறும் வதந்தியே என்ற நம்பிக்கைக்கு வட கிழக்கு மாநிலத்தவர்கள் வந்துள்ளதே இந்த மறு வருகைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அஸ்ஸாமிலும் கூட இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாம். அதாவது 2 மாவட்டங்களைத் தவிர பிற பகுதிகளில் நிலைமை அமைதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 3 சிறப்பு ரயில்கள் பெங்களூருக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தனை பேர் வருகிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.