போப் ஆண்டவரின் கடிதங்களை களவாடிய சமையல்காரருக்கு சிறை
வாடிகன்: போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம் எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப் மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் கெடுதல்கள் மற்றும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம் அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
இவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார். எனினும், அவருக்கு போப் ஆண்டவர் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.