தூக்கில் தொங்குவதற்கு முதல் நாள் இரவில் பாட்டுப் பாடிய கசாப்.. சாவதற்கு முன்பு தக்காளி கேட்டான்!
புனே: தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் இரவில் அஜ்மல் கசாப் இயல்பாக இருந்துள்ளான். தனது அறையில் பாட்டுப் பாடியபடி இருந்தானாம். அதேசமயம், இரவெல்லாம் அவன் தூங்கவில்லையாம்.
166 உயிர்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் கசாப் மட்டுமே. அவனுக்கு நேற்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இரவு முழுவதும் விழிப்பு.. வாய் நிறைய பாட்டு
செவ்வாய்க்கிழமையன்றுதான் உன்னை நாளை தூக்கில் போடப் போகிறோம் என்று கசாப்புக்குச் சொல்லியுள்ளனர். அதை இயல்பாக ஏற்றுக் கொண்ட கசாப், தனது அறையில் மிகவும் நார்மலாக இருந்துள்ளான். தூங்கவில்லை. பாட்டுக்களை முனுமுனுத்தபடி இருந்துள்ளான்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிறை மாற்றம்
முன்னதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆர்தர் சாலை சிறையிலிருந்து புனே எரவாடா சிறைக்கு கொண்டு வரப்பட்டான் கசாப். சிறப்பு கமாண்டோக்கள் புடை சூழ அவனைக் கொண்டு வந்துள்ளனர். அதற்கு முன்பே எரவாடா சிறையில் கசாப்பைத் தூக்கில் போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து வைத்து விட்டனர் அதிகாரிகள்.
பதட்டமே இல்லை
தூக்கில் போடுவதற்கு முன்பு செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவற்றின்போதும் நார்மலாக இருந்துள்ளான் கசாப். மேலும் டாக்டர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதட்டமே இல்லாமல் பதிலளித்துள்ளான்.
தக்காளி தர முடியுமா...?
தூக்கிலிடப்பட்ட நாளன்று அதிகாலையில் அவன் எழுந்தான். குளித்து முடித்த அவன், சாப்பிடுவதற்குத் தக்காளி வேண்டும் என்று கேட்டுள்ளான். இதையடுத்து ஒரு கூடை தக்காளியைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 2 தக்காளியை மட்டும் எடுத்த கசாப், அதில் ஒன்றை மட்டும் சாப்பிட்டான்.
குடும்பத்தினரை சந்திக்க விருப்பம்
அவனிடம் கடைசி ஆசை குறித்து கேட்டபோது குடும்பத்தினரை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளான். ஆனால் பாகிஸ்தான் தூதரகம் இதுதொடர்பாக பதிலே தரவில்லை என்று அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.
கடவுளிடம் மன்னிப்பு கேட்டான்
பின்னர் அவனை தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். கைகளை பின்புறமாக கட்டினர். கழுத்தில் கருப்புத் துணி மாட்டப்பட்டது. பிறகு கயிறு கழுத்தில் மாட்டப்பட்டது. அப்போது முனுமுனுத்தபடி பேச ஆரம்பித்தானாம் கசாப். அதில் தெளிவாக கேட்டது கடவுளிடம் மன்னிப்பு கோரி அவன் இறைஞ்சியதுதான்.