சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தி குமரி முக்கடல் சங்கமத்தில் கரைப்பு
குமரி: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
சிவசேனா தலைவர் பால்தாக்கரே அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவரது அஸ்தியை இந்தியாவில் உள்ள முக்கிய நதிகள், கடலில் கரைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிகளில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைப்பதற்காக அவரது அஸ்தியை நேற்று மும்பையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கேரள மாநில சிவசேனா தலைவர் புவனசந்திரன் மற்றும் திலிப் பனிக்கர், தமிழ்நாடு செய்தித்தொடர்பாளர் ராஜன், தென்மண்டல தலைவர் ராஜன், முன்னாள் நகர தலைவர் ராஜன், சுபாஷ், முன்னாள் கவுன்சிலர் ஜெயக் கண்ணன் ஆகியோர் தலைமையில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் அவரது அஸதிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கார் மூலம் குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம், நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், விவேகானந்தபுரம் வழியாக அஸ்தி கன்னியாகுமரி வந்தது.
அஸ்தி கலசம் 16 கால் மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானேர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அஸ்தி அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது.
இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் 10 அடி உயரத்தில் பால் தாக்கரேவின் மணல் சிற்பம் வரையப்பட்டிருந்தது. இதற்காக 6 யூனிட் மணல் பயன்படுத்தப்பட்டது. இந்த மணல் சிற்பத்தில் பால் தாக்கரேவின் முகத்தில் கலர் மணல் மற்றும் சாயம் பயன்படுத்தப்பட்டிருந்தது. தேரூர் புதுக்கிராமத்தை சேர்ந்த கலைஞர்கள் சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் 13 மணி நேரத்தில் இந்த மணல் சிற்பத்தை வரைந்துள்ளனர்.