தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு பதவி உயர்வு: அதிமுக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 10 பேருக்கு தமிழக அரசு பதவி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக போலீசில் உள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் மாலதி, டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர் அடங்கிய குழு பதவி உயர்வு பட்டியல் குறித்து நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.
இதில், ஐ.ஜி.க்களாக உள்ள சஞ்சய் அரோரா (நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனர்), சுனில்குமார் (சீருடைப் பணியாளர் தேர்வாணையம்), சுனில்குமார் சிங் (நெல்லை கமிஷனர்) ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதே போல டி.ஐ.ஜி.க்களாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் (எஸ்பிசிஐடி), சந்தீப் மிட்டல் (மத்திய அரசுப் பணி), பாலநாகதேவி (மதுரை டிஐஜி), ரவிக்குமார் (சென்னை கிழக்கு இணை கமிஷனர்), சேஷசாயி (மத்தியக் குற்றப்பிரிவு இணை கமிஷனர்), நல்லசிவம் (தலைமையிட இணை கமிஷனர்), ராமசுப்பிரமணி (ராமநாதபுரம் டிஐஜி) ஆகியோருக்கு ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு, புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.