ஐ.மு. கூட்டணியில் இணைய நிதிஷ்குமாரின் பேரம் ' பீகாருக்கு சிறப்பு' அந்தஸ்து?
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் பாஜகவில் பெரும்பான்மையினர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை நிதிஷ்குமார் விரும்பவில்லை. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அண்மையில் மத்திய பட்ஜெட்டுக்கும் கூட நிதிஷ்குமார் பாராட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
டெல்லியில் 'திராணி'
இந்நிலையில் நரேந்திர மோடியை விட தமக்கு மக்கள் ஆதரவு, செல்வாக்கு அதிகம் உள்ளது என்று காட்டவும், ‘பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் நிதிஷ்குமார் டெல்லியில் ஏற்பாடு செய்து இருந்தார். ‘அதிகார்' என்ற இப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்தது.லட்சக்கணக்கான பீகார் மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசுகையில்,
பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பீகார் மாநில மக்கள் பிச்சை கேட்கவில்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்று கேட்பது பீகார் மக்களின் கடமை.லட்சக்கணக்கான பீகார் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவையான வாழ்வாதார வசதிகள் தேடி பீகாரை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு அகதிகள் போல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
குஜராத் மாயை
ஒரு மாநிலம் நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளது என்று கூறிக்கொள்கிறார்கள். அங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக ஒரு மாயையை, யானையைப் பிடிக்க ஒரு குழி தோண்டி இலை, தழைகளால் மூடப்பட்ட இருப்பது போல் பொய்யான ஒரு தோற்றத்தை காண்பித்து உள்ளனர். பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளித்து பாருங்கள், பின்னர் உண்மையான வளர்ச்சி, முன்னேற்றம் எந்த மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது என்பதை பார்ப்பீர்கள்.
2014-ல் தெரியும்
பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிப்பதில் மத்திய அரசு சாதகமான முடிவு எடுத்தாலும், பாதகமான முடிவு எடுத்தாலும் அது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அப்படி நீங்கள் இப்போது சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கவில்லை என்றால், 2014 பார்லிமென்ட் தேர்தலுக்குப் பின்னர் நீங்கள் அளித்தே தீர வேண்டும். அதற்கான ஒரு சூழ்நிலை 2014 தேர்தலுக்குப் பின்னர் டெல்லியில் ஏற்பட்டே தீரும் என்றார் அவர்.