கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 8 பேரின் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் 4 வாரம் தடை
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 8 தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்துள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 8 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தார். இதையடுத்து எங்கே தங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தூக்கிலிட்டுவிடுவார்களோ என்று பயந்த அந்த 8 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி பி. சதாசிவத்தின் வீட்டில் வைத்து விசாரிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஒய், இக்பால் அடங்கிய பெஞ்ச் தண்டனையை நிறைவேற்ற 4 வார தடை விதித்துள்ளது. நீதிபதிகள் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் வழக்கு மாதிரி ஆகிவிடக்கூடாது(அப்சல் குரு தூக்கு). அவர் தூக்கிலிடப்பட்ட பிறகே அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பை அவரது உறவினர்கள் இழந்துவிட்டனர் என்றனர்.
தற்போது ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா, அவரது கணவர் சஞ்சீவ், சுரேஷ், ராம்ஜி, குர்மீத் சிங், சந்தர் சிங், ஜாபர் அலி, பிரவீன் குமார் ஆகியோரின் கருணை மனுக்கள் தான் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் சோனியாவும், சஞ்சீவும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கடந்த 2001ம் ஆண்டு கொலை செய்துள்ளனர். குர்மீத் தனது குடும்பத்தார் 13 பேரை கொன்றுள்ளார். ஜாபர் தனது மனைவி மற்றும் 5 மகள்களை கொலை செய்துள்ளார். சுரேஷ், ராம்ஜி ஆகியோர் தங்கள் உறவினர் 5 பேரை கொன்றுள்ளனர், பிரவீன் குமார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்துள்ளார்.