டெல்லியில் ஃபேஸ்புக் மூலம் 8 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை!
லூதியானா: பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை ஃபேஸ்புக்கில் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவில் பிறந்த அந்த குழந்தையை டெல்லியைச் சேர்ந்த பிசினஸ் புள்ளி ஒருவர் 8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் நூரி. அவருக்கு கடந்த ஏப்ரல் 10ம் தேதி, குழந்தை பிறந்தது. அதனை குழந்தையின் தாத்தா பெரோஸ் கான் ஒரு நர்ஸ் உதவியுடனும், மருத்துவமனையின் இன்னொரு ஊழியர் உதவியுடனும் எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டார்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை விற்பனை செய்ய தாத்தா பெரோஸ் கான் விரும்பியதாகவும், அவரது மகளுக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்ததால், குழந்தை தனது மகளின் மறுமணத்துக்கு தடையாக இருக்கும் என்று எண்ணி அவர் விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.
மருத்துவமனை ஊழியர் குர்ப்ரீத் சிங், குழந்தையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, பின்னர் டெல்லி வர்த்தகப் புள்ளியிடம் பேரம் பேசி ரூ.8 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனையடுத்து லூதியானாவில் இந்தக் குழந்தையை விற்பனை செய்தவர்கள், மற்றும் டெல்லியில் குழந்தையை வாங்கிய அமித்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அமித் குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு குழந்தையை மீட்ட போலீஸார், அதை தாயாரிடம் ஒப்படைத்தனர்.