மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.5,000 கோடி திட்டம்:
மின்சாரத்தை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, மின் வினியோகமும் சீராக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் உதவி:
இத்திட்டத்தினை செயல்படுத்த ஜப்பானிய நிறுவனம் 3,572 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும். இந்தக் கடன் சிறப்பினமாகக் கருதப்பட்டு ஆண்டு ஒன்றிற்கு 0.55 சதவீத சலுகை வட்டியைக் கொண்டிருக்கும். மேலும் இந்தக் கடன் தொகையை, கடன் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம். இதன் மூலம் மாநிலத்தின், குறிப்பாக சென்னையின் மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு சீரான மின் வினியோகம் உறுதிபடுத்தப்படும்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி மூலம், 2,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்குரிய மின்தொடர் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் புதிய மின் நிலையங்கள் சென்னையில் கிண்டி, கொரட்டூர், மணலி மற்றும் ஒட்டியம் பாக்கத்திலும், கோவையில் காரமடையிலும் அமைக்கப்படும்.
ரூ. 822 கோடியில் 14 புதிய துணை மின் நிலையங்கள்:
இது மட்டுமல்லாமல், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 14 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் துணை மின் நிலையங்கள் சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர் மூன்றாவது பிரதான சாலை, சென்னை சென்ட்ரல், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மின்சார வாரியத் தலைமை அகம் ஆகிய இடங்களிலும்; திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் கருவலூர்; மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்; அரியலூர் மாவட்டம் பொய்யூர்; திருவண்ணாமலை மாவட்டம் புரிசை; விருதுநகர் மாவட்டம் சவ்வாஷ்புரம்; ஈரோடு மாவட்டம் செண்பகபுதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.
வேலூர் திருவலத்தில் 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம்:
தென் மாநிலங்களுக்கு இடையே மின் பகிர்மாற்றம் செய்யும் வகையில் வேலூர் மாவட்டம் திருவலத்தில் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட ஒரு புதிய துணை மின் நிலையம் இந்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனைப் பயன்படுத்தி, பிற மாநிலங்களிலிருந்து அதிக அளவு மின்சாரத்தை பெற ஏதுவாக, திருவலத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையமும் அதற்கான மின் தொடர்களும் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு துவங்கப்படும்.