நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது கவலைக்குரியது: சிபிஐ
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தை சிபிஐ உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் சிபிஐக்கு தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று கான்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான 1993, 2004ஆம் ஆண்டு கோப்புகள் காணாமல் போய்விட்டன. இந்தக் கோப்புகளை இதர அமைச்சகங்களிடம் இருந்து பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
இது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, கோப்புகள் மாயமானது கவலைக்குரியது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது நாங்கள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வோம். தற்போது கோப்புகள் காணாமல் போயிருக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும் என்றார்.
இதனிடையே கோப்புகள் எப்படி மாயமானது என்பது தொடர்பாக விசாரிக்க நிலக்கரி துறை அமைச்சக கூடுதல் செயலர் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.