பெங்களூரின் 'தாராவி' ஹொங்கச்சந்திரா.. அதிகரித்த கொரோனா.. களம் வந்த அன்பு குமார்.. வீடு வீடாக சோதனை
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா வைரஸ் தாக்குதலின் கிளஸ்டராக மாறியுள்ளது பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஹொங்கச்சந்திரா. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், அவருடன் பழக்கத்திலிருந்த 180க்கும் மேற்பட்டோர் ஓட்டல் அறைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில், ஏற்கனவே சுமார் 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறருக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஹொங்கச்சந்திரா, பெங்களூர் நகரின் தாராவி என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு காரணம் இங்கு ஏழைகள் அதிக அளவில் இருக்கிறார்கள். தமிழர்களும் கணிசமானோர் உள்ளனர். வீடுகள் மிக நெருக்கமாக இருக்கின்றன. ஒரே வளாகத்திற்குள் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பது இங்கு சகஜம். அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் போடப்பட்ட வீடுகள். எனவேதான் இங்குள்ள பகுதியில் பாதிப்பு வேகமாக இருக்கிறது.
சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்கப்பட்ட பகுதியாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள்
இதனிடையே, பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் தீவிரமான பரிசோதனைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீவிர பரிசோதனை
"இந்த பணிகளுக்காக பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி உள்ள 5 வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஹொங்கச்சந்திரா கண்டைன்மெண்ட் பகுதி தவிர, அருகாமையிலுள்ள பிற பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன" என்று பெங்களூரு மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் அன்பு குமார் தெரிவித்துள்ளார். இவர்தான் பொம்மனஹள்ளி மண்டலத்தில், கொரோனா நோய் தடுப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ஆகும். மேற்கண்ட பணிகளை இவர் உத்தரவின்பேரில்தான் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அன்பு குமார்
இந்த சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரியான அன்பு குமார் ஒரு தமிழர் ஆகும். 1974ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த அன்பு குமார், சென்னை பல்கலைக்கழகத்தில், எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்தவர். 2004ம் ஆண்டு, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கர்நாடகா கேடர் அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர். இங்கு பல துறைகளையும் நிர்வகித்துள்ளார். பல மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். அன்பு குமார் களம் வந்த பிறகு, ஹொங்கச்சந்திராவில், பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நல்ல விஷயம்
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஹொங்கச்சந்திரா வார்டு பகுதியில் புதிதாக எந்த ஒரு நோயாளியும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் பீஹார் தொழிலாளியுடன் பழக்கத்திலிருந்து அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
182 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இதுவரை 182 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 20% அளவுக்கானோருக்கு மட்டும் பாசிட்டிவ் வந்துள்ளது. இருப்பினும் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள மாநகராட்சி தயாராக இல்லை. எஞ்சிய 150 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட 12வது நாளில் பரிசோதனை செய்ய அரசு தயாராக இருக்கிறது. இவர்கள் எந்தெந்த கடைகளுக்கு சென்றார்களோ அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன.
சீல் வைக்கப்பட்ட ஹொங்கச்சந்திரா
அவர்களுக்கு அறிகுறி காட்டாவிட்டாலும் பரிசோதனை நடத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஹொங்கச்சந்திரா கண்டைன்மெண்ட் பகுதிக்கு உள்ளே வரக் கூடிய இடத்தில் 1212 வீடுகள் முழுமையாக சீல் செய்யப்பட்ட பகுதிக்குள் வருகின்றன. இங்கு 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே கொண்டுசென்று கொடுக்கப்படுகின்றன.