கூடிக் கொண்டே போகிறது கொரோனா பலி எண்ணிக்கை.. கடந்த வாரம் ரொம்ப மோசம்.. கடும் அச்சத்தில் கர்நாடகா
பெங்களூர்: கொரோனா பலி எண்ணிக்கையில் கடந்த வாரம் கர்நாடகா ஒரு மோசமான அத்தியாயத்தை கடந்து வந்துள்ளது. மே 7ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் 3500 கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோயின் தாக்கம் ஏற்பட்ட பிறகு இந்த அளவுக்கு ஒரே வாரத்தில் இத்தனை நோயாளிகள் பலியானதாக புள்ளிவிவரங்கள் இல்லை. இது தான் முதல் முறை என்பதால் கடந்த வாரம் கர்நாடகாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வாரம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒருநாள் பலியானோர் எண்ணிக்கை முதல் வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம் என்கிறது அரசு புள்ளிவிவரம்.
இந்த மாதம் 5000த்திற்கும் மேற்பட்ட கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் , அதில் 2700க்கும் மேற்பட்டோர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு சோகம்.
கடந்த வருடம் முதலாவது அலை தாக்கியபோது கர்நாடகாவில் ஆகஸ்ட் மாதம் மிக மோசமான பாதிப்பு பதிவானது. ஆனாலும், அப்போது, அதிகபட்சமாக 3 ஆயிரத்து 388 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருந்தனர். ஆனால் இப்போது மிக மோசமான ஒரு காலகட்டம் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உலகுக்கு உணர்த்துகின்றன.
புதிய வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் எந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை கர்நாடக புள்ளிவிவரங்கள் ஒரு எச்சரிக்கை மணி போல நமக்குக் காட்டுகின்றன.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தளவில் ஒரு நாளைக்கு 400 பேர் சராசரியாக கொரோனாவுக்கு பலியாவதாக சொல்கிறது புள்ளிவிபரம். ஆனால், இதற்கும் அதிகமானோர் பலியாகி இருக்க கூடும், அரசு புள்ளிவிவரங்கள் சற்று குறைவாக காட்டக் கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.
பெங்களூர் நகரத்தில் மட்டும் சராசரியாக 211 பேர் பலியானதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது . கடந்த 14 மாதங்களில் இந்த அளவுக்கு அதிகபட்சமாக தினசரி சராசரி இருந்தது கிடையாது. மே மாதம்தான் இது போல மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது.
மே மாதம் 7ம் தேதியிலிருந்து 13-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 3,500 நோயாளிகள் பலியாகியுள்ளனர். இது 107 சதவீதம் என்ற அளவுக்கு மிக அதிகமாகும் . ஏனென்றால் மே முதல் வாரத்தில் 1,689 பேர் பலியாகியிருந்தனர் .ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதிக்கு இடைப்பட்ட அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1, 448 என்ற அளவுக்கு எடுத்து அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுக்கு நோயாளிகளின் பலி எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை, பெட் இல்லை என்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் இது போல இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை பொருத்தி பார்க்க வேண்டியதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications