வெளியேறும் பிரிட்டன்... இந்திய பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி... சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிவு!!
மும்பை: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியான நிலையில் இந்திய பங்குச் சந்தைகளில் படுபயங்கரமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிவடைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா? தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாகவே முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த முடிவுகள் இந்திய பங்குச் சந்தையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் வெளியேறினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவானது.
இதனால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் வரை சரிவை கண்டது. இது கடந்த 10 மாதங்களில் ஏற்பட்டுள்ள மிக பயங்கரமான சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 300 புள்ளிகள் வரை சரிவை கண்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ், அனைத்து நிலைமைகளையும் எதிர்கொள்ள இந்தியா தயராக உள்ளது என்றார்.