ஏடிஎம்களில் பணம் எடுப்போர் எண்ணிக்கை 9% சதவீதம் குறைந்தது! வங்கிகளில் கூட்டம்!!
சென்னை: வங்கி ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், அதிகபட்சமாக 5 முறை மட்டுமே இலவசமாக ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கலாம் அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிரடியாக கட்டுப்பாடு விதித்தது.
இதன் எதிரொலியாக ஒரே மாதத்தில் 9 சதவீதம் அளவுக்கு ஏ.டி.எம். பணப்புழக்கம் சரிவடைந்துள்ளது.
கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வங்கிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். என்றால் அதிகபட்சமாக 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். என்றால் அதிகபட்சமாக 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதே அந்த கட்டுப்பாடாகும்.
ஏடிஎம் சென்று பண இருப்பை சோதித்து பார்த்தாலும், கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல உள்ளது. இதனால் ஏடிஎம் செல்லவே பயனாளிகள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம் பயன்பாடு குறைய ஆரம்பித்துள்ளது.
நவம்பர் மாதத்தில்தான் கட்டுப்பாடுகள் ஆரம்பித்தன என்பதால் அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டால் சுமார் 9 சதவீத அளவுக்கு பரிவர்த்தனை குறைந்துள்ளது.
அக்டோபரில் ஏடிஎம்கள் மூலம் ரூ.26.8 கோடி பணம் எடுக்கப்பட்ட நிலையில், நவம்பரில் அது ரூ.24.4 கோடியாக குறைந்துள்ளது. ஹெச்.டி.எப்.சி, மற்றும் ஆக்சிஸ் ஆகிய முன்னணி தனியார் வங்கிகள் டிசம்பர் மாதம் முதல்தான் புதிய கட்டண நடைமுறையை அறிமுகம் செய்துள்ளன. எனவே அடுத்த இம்மாதம், ஏடிஎம் பயன்பாடு மேலும் பல மடங்கு குறையும் வாய்ப்பு உள்ளது.
ஏடிஎம்-மில் பணம் எடுப்பது குறைந்துள்ளது என்றால், வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கே சென்று பணம் எடுக்க ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் பொருள். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் பணிச்சுமையால், வங்கி ஊழியர்கள் அவதிக்குள்ளாகப்போவது மட்டும் நிச்சயம்.