கைகொடுத்த பருவமழை... சட்டென்று குறைந்த துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு விலை
கடந்த 2015, 2016 ஆண்டு ஜூன் மாதம் வரை பருப்பு, பயறுகளின் விலை உச்சத்தில் இருந்தது. இப்போது படிப்படியாக குறைந்து மக்கள் எளிதில் வாங்கும் அளவிற்கு விற்பனையாகிறது.
சென்னை: கடை வீதிக்கு போய் பல மாதங்கள் ஆகிவிட்டது. மளிகை சாமான்கள் வாங்க போனால் காசு கரையவில்லை. காரணம் இல்லாமல் இல்லை. கடந்த ஒரு மாத காலமாகவே காய்கறிகள் விலை குறைவாகவே இருக்கிறது.
ஒருகிலோ துவரம் பருப்பு 70 ரூபாய் என்று கடைகளில் எழுதிப்போட்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாகவே இருக்கிறது. அனைத்து வகையான பயறுகள், பருப்புகளின் விலைகளும் குறைந்து அனைவரும் எளிதில் வாங்கும் அளவிற்கே விற்பனையாகி வருகிறது. இதனால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதால் பணத்தட்டுப்பாடு நேரத்திலும் இல்லத்தரசிகளின் முகங்களில் புன்னகை பூக்கத் தொடங்கியுள்ளது. இந்த விலை குறைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
தென்மேற்கு பருவமழை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிமாக பெய்ததால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது.
உச்சத்தில் இருந்த பருப்புகள்
கடந்த ஆண்டு வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் பருப்பு வகைகளும் பதுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு மூட்டை ரூ.18 ஆயிரம் என்ற அளவுக்கு விலை உயர்ந்தது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.200க்கு விற்பனை ஆனது.
பதுக்கல் பருப்புகள்
பருப்பை பதுக்கி, செயற்கையான விலை ஏற்றத்தை ஊக்குவித்தனர். இதனால் உளுந்தம்பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு விலையும் உச்சத்தில் இருந்தன. உளுத்தம் பருப்பு, 1 கிலோ, 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு, 1 கிலோ, 200 ரூபாயை தாண்டி விட்டது.இதனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பணத்தட்டுப்பாடு
கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புடைய பணத்தை செல்லாது என்று அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு பிரச்சினை எழுந்தது. இதனால் வர்த்தகர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பருப்பு வகைகள் அனைத்தும் சந்தைகளுக்கு விற்பனைக்கு வர தொடங்கின.
சரியும் விலை
அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் வட மாநிலங்களில் போதிய அளவு பெய்து பருப்பு வகைகளின் விளைச்சலும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது.பணப் பிரச்னையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்புகள் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றன. எனவே பருப்பு விலை சரியத் தொடங்கியுள்ளது.
மோடியின் பயணம்
பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பருப்பு இறக்குமதிகளுக்கான ஒப்பந்தங்களை போட்டதால் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் பருப்பு வகைகள் இந்தியாவுக்கு வருகின்றன. இதுபோன்ற காரணங்களினால் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் பருப்பு வகைகளின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது.
பருப்புகளின் விலைகள்
கடந்த மாதம் துவரம் பருப்பு (முதல் ரகம்) கிலோ ரூ.120க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.90க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு (2ஆம் ரகம்) ரூ.90ல் இருந்து ரூ.70க்கும், உளுத்தம் பருப்பு (முதல் ரகம்) ரூ.130ல் இருந்து ரூ.110க்கும், உளுந்தம் பருப்பு (2ஆம் ரகம்) ரூ.120ல் இருந்து ரூ.90க்கும் விற்கப்படுகிறது.
வெளி மாநில பருப்புகள்
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பால் பாசிப்பருப்பு ரூ.110ல் இருந்து ரூ.70, பாசிப்பருப்பு (2ஆம் ரகம்) ரூ.100ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது. ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் கடலை பருப்பு ரூ.140ல் இருந்து ரூ.115 ஆகவும் விலை குறைந்து வருகிறது. பருப்பு வகைகளின் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக மொத்த மளிகைக்கடை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
ரேசன் கடை பருப்புக்கு மவுசு இருக்காது
கடந்த சில ஆண்டுகளாக வெளி சந்தைகளில் பருப்பு விலைகள் உச்சத்திற்கு சென்றதால் ரேசன் கடைகளில் பருப்புகளை மலிவு விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது வெளிச்சந்தைகளில் பயறு, பருப்புகளின் விலை குறைந்து வருவதால் இனி ரேசன் கடை பருப்புகளுக்கு வரவேற்பு குறையும் என்றே எதிர்பார்க்கலாம்.