கிராமப்புறங்களுக்கு 40% புதிய ரூபாய் நோட்டுக்கள் விநியோகியுங்கள்- ரிசர்வ் வங்கி ஆர்டர்
புதிய ரூபாய் நோட்டுகளில், 40 சதவீத நோட்டுகள் கிராமப்புறங்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கடந்த நவம்பர் 8 ஆம்தேதியன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். செல்லாத நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் முதல் கடந்த 55 நாட்களாக சில்லறை நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வங்கி வாசல்களிலும், ஏடிஎம்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பணத்தட்டுப்பாடு பிரச்சினை நகரங்களில் வசிப்பவர்களை ஒரு விதமாக பாதித்தால், கிராமங்களில் வசிப்பவர்களை வேறு விதமாக பாதித்து வருகிறது.
கடந்த 55 நாட்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண விநியோக நிலைமை இன்னும் சீரடையவில்லை. இதன் விளைவாக, வாரத்துக்கு ரூ.24,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பை மத்திய அரசு தளர்த்தவில்லை. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பணமில்லாத பரிவர்த்தனைக்கு மாற மக்கள் தயாராகி விட்டார்களா? என்பது கேள்விக்குறிதான். இதனால் பிரச்சினைகள் அதிகரித்துதான் வருகின்றன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தேவைக்கு ஏற்ப போதிய அளவில் ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை என்பதை ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது. அதை சரிசெய்வதற்காக சில நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக கிராமப்புறங்களில் 40 சதவீத நோட்டுகளை விநியோகிக்குமாறு ரூ.100க்கும் குறைவான மதிப்புடைய நோட்டுகளை தாராளமாக புழக்கத்தில் விடுமாறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, நிதி இருப்பை வைத்துள்ள பெரிய வங்கிகள் புதிய ரூபாய் நோட்டுகளை தங்களின் மண்டல ஊரக வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி நிலவர விவகாரத்தில் இயல்புநிலையைக் கொண்டுவர கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும், கிராமப்புறங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி தனது புத்தாண்டு உரையின்போது, வங்கிகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கிராமப்புற மக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துவரும் சூழலில், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புற மக்களுக்கும் போதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கச் செய்வது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில், 40 சதவீதப் புதிய நோட்டுகள் கிராமப்பகுதிகளைச் சென்றடைய வேண்டும் என்றும், இதனை வங்கிகள் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரூ.100 நோட்டுகள் விநியோகிப்பதில் எந்த தடையும் இல்லை என்பதால், அதனை தாராளமாக வங்கிகள் வழங்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டு விநியோகத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க வேண்டியது வங்கிகளின் கடமைகளில் ஒன்று எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.