அதிர்ந்த உலக ரசிகர்கள்.. ரிஷப் பண்ட் மட்டுமில்ல! “ஷாக்” கொடுத்த கிரிக்கெட் வீரர்களின் கோர விபத்துகள்
சென்னை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிஷப் பண்டைபோல் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் விபத்தில் சிக்கி உள்ளார்கள். இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் யார்? எப்படி விபத்து ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் மக்கள் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். அதில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அடங்குவார்கள். 2022 ஆம் ஆண்டிலும் ஏராளமான வாகன விபத்துகள் நிகழ்ந்து இருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ரிஷப் பண்ட் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி உள்ளார். ரிஷப் பண்டைபோல் பல கிரிக்கெட் வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளார்கள். அதில் 5 விபத்துகளை பார்ப்போம்.
ரிஷப் பண்டிற்கு மட்டும் இல்லை..கொரோனா காலத்தில் பெரிதும் உதவிய பேருந்து ஓட்டுநர்..வெளியான புது தகவல்
ரிஷப் பண்ட்
இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதை தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக காரில் உத்தராகண்ட் மாநில டேராடூன் அருகே ரூர்கி பகுதிக்கு காரில் சென்றுள்ளார் ரிஷப் பண்ட். அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த அவரது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. அடுத்த சில நொடிகளில் கார் தீப்பிடித்து எரிந்தது. கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியில் தப்பி இருக்கிறார். இதில் ரிஷப் பண்டுக்கு தலை, முதுகு, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
ஆண்ட்ரியூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரியூ சைமண்ட்ஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். ஆலிஸ் ஆற்று பாலம் அருகே ஹெர்வே ரேஞ்ச் சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார் உருண்டு சென்று விபத்து உள்ளானது. 2 முறை உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பங்காற்றிய சைமண்ட்சின் மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆண்ட்ரியூ ஃப்ளிண்டாஃப்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஆண்ட்ரியூ ஃப்ளிண்டாஃப். சென்னை சூப்பர் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். இவர் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி பிபிசி நடத்தி வரும் டாப் கியர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கார் விபத்தில் சிக்கினார். இதில் ஃப்ளிண்டாஃபுக்கு படுகாயம் ஏற்பட்டது.
மன்சூர் அலி கான் பட்டோடி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலி கான் பட்டோடி
கடந்த 1961 முதல் 1975 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியவர். இவர் கடந்த 1961 ஆம் ஆண்டு பிரிட்டனில் காரில் சென்றுகொண்டிருந்த மன்சூர் அலி கான் பட்டோடி தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது வலது கண்ணில் படுகாயம் ஏற்பட்டது.
சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் கடந்த 2014 ஆம் அண்டு ஆகஸ்டு 10 ஆம் தேதி பிரிட்டனின் மான்செஸ்டரில் இருந்து லண்டனுக்கு செல்லும் வழியில் விபத்துக்கு உள்ளானார். இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு சக வர்ணனையாளர்களான மார்க் நிக்கோலஸ் மற்றும் சந்திரேஷ் பட்டேல் ஆகியோருடன் காரில் சென்ற அவர் இந்த விபத்தில் சிக்கினார்.