ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலையில் அதிமுக வெல்லும்..கூட்டணி வியூகம்..ஜி.கே.வாசன் நம்பிக்கை
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். அதிமுக இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நிறைய வெற்றிகளும் பெற்றிருக்கிறது. அதிமுகவின் வியூகம் வெற்றி வியூகம் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். வென்றே ஆக வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்துள்ளது திமுக. இதற்காக 11 அமைச்சர்கள் கொண்டு பெரும்படையை களமிறக்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும் கூட்டணி தர்மத்திற்காக இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க வலிமையான அதிமுகவினால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார் ஜி.கே.வாசன். எனவேதான் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவிற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஜி.கே. வாசன். செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் அதற்கான வெற்றி வியூகத்தை அதிமுக வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன். அப்போது அவரிடம் அதிமுக பிளவுபட்டிருப்பது, இபிஎஸ் அணியினர், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தது, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன்,கூட்டணியில் அதிமுக தான் பிரதான கட்சி. அந்தக் கட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து ஒரு வியூகம் வகுத்துள்ளது. அதுபற்றியே ஆலோசித்தோம். அதிமுக இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அதிமுக பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நிறைய வெற்றிகளும் பெற்றிருக்கிறது. அதிமுகவின் வியூகம் வெற்றி வியூகம்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் அரசியலில் எப்போதும் நல்லதையே நினைக்கிறேன். அதனால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். அதிமுக உறுதியாக வெற்றி பெறும் என்று அந்த நம்பிக்கையில்தான் கூறுகிறேன். மேலும், திமுக ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அதிமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ஜி.கே.வாசன்.