ஒல்லி, குண்டு, சொட்டை, நெட்டை, குட்டைனு பாடி ஷேமிங் செய்வது தவறு.. அது ஏன் தெரியுமா? டாக்டர் பரூக்
சென்னை: ஒருவரின் உடல் அங்கங்களை கேலி செய்யும் விதத்தில் பாடி ஷேமிங் செய்வது ஏன் தவறு என்பது குறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார். இந்த பதிவை பார்த்தாவது பிறர் மனம் நோகும்படி பாடி ஷேமிங் செய்வதை கைவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது வலைதள பக்கத்தில் கூறியதாவது: நம்மிள் பலரும் நம் உறவினர்கள் , நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்தவை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு விதிவிலக்கல்லன்.

அங்கங்கள்
ஒருவரது அங்கங்கள் உடல் கூறு தோலின் நிறம் உடை உடுத்தும் பாங்கு நடக்கும் விதம் போன்றவற்றை வைத்து பகடி செய்வது "பாடி ஷேமிங்" ஆகும். குண்டன், குண்டச்சி, குந்தாணி, ஒட்டடக்குச்சி, சோடாபுட்டி, எலும்பன், எலும்பி, பரட்டத்தலை, சொட்டை, வெள்ளச்சி, கருப்பன், கருவாச்சி என்று பற்பல சொற்களை சுட்டி அழைப்பது அல்லது கேலி பேசுவது என்பது தொடர்ந்து நமது குடும்பமும் சரி , சமூகமும் சரி, தவறென்று சுட்டாமல் அனைவரும் செய்து வரும் பழக்கமாக இருக்கிறது.

சிந்தனை முரண்பாடு
நமக்குத் தெரிந்தவர், தெரியாதவர், யாராயினும் நமது நாவை காத்து அவர்களது மாண்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதற்காகவெல்லாம் பாடி ஷேமிங்கை ஆயுதமாக பயன்படுத்தத் தேவையில்லை. கருத்து முரண்பாடு, சிந்தனை முரண்பாடு, செயல் முரண்பாடு, கொண்ட கொள்கைகளில் முரண்பாடு, நம்பிக்கைகளில் முரண்பாடு போன்றவை மனிதர்களுக்குள் காலங்காலமாக இருந்து வருபவை தான்.

முரண்பாடு
எனவே நமக்கு முரண்பாடாக ஒருவர் தெரிந்து விட்டதாலேயே அவரது உடலைக் கூறுபோட்டு நமது வாய்ச்சொற்களால் படையல் வைக்கத் தேவையில்லை. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள் அவர்களுக்கென பிரத்யேகமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நிச்சயம் ஒருவர் போல் மற்றொருவர் இல்லை. ஒருவர் வாழும் வாழ்க்கை போல இன்னொருவரும் வாழ்வதில்லை. எனவே நம்மைப் போலவே மொத்த உலகமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

உடல் பருமன்
ஒருவர் உடல் பருமனாக இருக்கிறார் என்பது தான் நமக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பின்னால் அவர் ஏன் பருமனாக இருக்கிறார். அதை கட்டுக்குள் வைக்க அவர் முயற்சிகள் செய்தாரா? என்பது நமக்குத் தெரியாது. ஒருவர் ஒல்லியாக இருப்பதாலோ குண்டாக இருப்பதாலோ
கருப்பாக இருப்பதாலோ சொட்டையாக இருப்பதாலோ எந்தத் தவறுமில்லை நமது கண்களிலும் அது கொண்ட பார்வையிலும் சிந்தனையிலுமே தவறுண்டெனக் கொள்க நிச்சயம் ஒரு மனிதனின் சொற்கள் செயல்கள் இன்னொரு மனிதனை பாதிக்கிறது.

பலகீனங்களை பெரிதுப்படுத்தாதீர்
நல்ல சொற்கள், செயல்கள், நல்ல விளைவுகளை இன்னொரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. தீய சொற்களும் செயல்களும் இன்னொரு மனிதனுக்கு துன்பத்தை விளைவிக்கிறது. எக்காலத்திலும் பிறரது உடல் சார்ந்த ஊனங்களையும் பலகீனங்களையும் பெரிதுபடுத்தி பேசுவது தவறு குறிப்பிட்ட அந்த பிரச்சனைகளுக்கு சிறப்பான தீர்வு உண்டெனக் கருதினால் தனிமையில் சம்பத்தப்பட்டவரிடம் தெரிவிப்பது மாண்பு அதை விடுத்து பொதுவெளியில் கேலி பேசுவதும் எள்ளிநகையாடுவதும் சரியன்று நாம் திருந்திக் கொண்டு நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.

உடல் வாகுக்கும் கேசத்துக்கும்
யாருக்கும் அவரது சருமத்துக்கும் உடல் வாகுக்கும் கேசத்துக்கும் உடைக்கும் மரியாதை வழங்கத் தேவையில்லை. மாறாக அவரது கல்வி , சிந்தனை , செயல் போன்றவற்றை வைத்தே மதிப்பிடக் கற்றுக் கொடுப்போம். கேரளாவில் பாடி ஷேமிங் செய்வது தவறு என்பதைக் குறித்த விழிப்புணர்வை பள்ளி பாடங்களில் சேர்ப்பது குறித்த செய்திகள் வரவேற்கத்தக்கவை. இவ்வாறு தனது சமூகவலைதள பதிவில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications