படம் பார்க்கவா டெல்லியிலிருந்து வந்தீர்கள்...? மத்தியக் குழுவை மறிக்க முயன்ற மக்கள்..!
சென்னை: புயல் மற்றும் மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழு நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. ஆயிரக்கணக்கான பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அரசு முகாம்களில் தங்கியுள்ளனர்.
சென்னையிலேயே இந்த நிலை என்றால் கடலூர், நாகை மாவட்டங்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அவ்வளவு பெரிய பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தென் சென்னை -வட சென்னையில் ஆய்வு செய்ய சென்ற மத்திய குழுவினர் நேரடியாக களத்திற்கு செல்லாமல் புகைப்படங்களை பார்த்துவிட்டு புறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
சென்னை வேளச்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் பார்க்காமல் அறைக்குள் காட்சிப்படுத்தப்பட்ட புயல் சேத விளக்கப் படங்களை பார்த்துவிட்டு மத்திய குழு அதிகாரிகள் சென்றிருக்கின்றனர்.
சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு
இதனால் ஆவேசமடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய குழு அதிகாரிகள் காரை மறித்து படம் பார்க்கவா டெல்லியில் இருந்து இங்கு வந்தீர்கள் என தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். மொத்தம் 7 பேர் கொண்ட குழு வந்த நிலையில் தென் சென்னை- வட சென்னை என இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து வசதிமிக்க சென்னையிலேயே இந்த லட்சணத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள் என்றால் இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ள கடலூர் போன்ற மற்ற உள் மாவட்டங்களில் எல்லாம் எப்படி ஆய்வு செய்வார்களோ என சுனாமி குடியிருப்பு பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.