சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு
சென்னை ஐஐடி வளாகத்தில் நான்கு மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதில் ஒரு மானுக்கு ஆந்தராக்ஸ் தாக்கியது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
சென்னை: ஐஐடி வளாகத்தில் நான்கு மான்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மான்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒரு மான் ஆந்தராக்ஸ் நோயினால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி வளாகம் அமைந்துள்ள அடர்வனப்பகுதி என்பதால் ஏராளமான புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வளாகத்தில் நாய்கடி, பிளாஸ்டிக் கழிவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 35 மான்கள் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது.

ஐஐடி வளாகத்தில் நாய்கள்
ஐஐடி வளாகத்தில் 188 நாய்கள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் 50 நாய்கள் உயிரிழந்துவிட்டதாகவும், 41 நாய்கள் தத்தெடுக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 22 இன்னும் ஐஐடி வளாகத்தில் சுற்றித்திரிகின்றன.

உயிரிழக்கும் மான்கள்
இந்நிலையில், கடந்த 2021 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையிலான 6 மாத காலகட்டத்தில் 31 புள்ளிமான்கள், 4 கலைமான்கள் உயிரிழந்துள்ளது . இதில், 14 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் உட்கொண்டதால் 4 மான்கள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மான்கள் வேட்டையா?
நாய் கடித்ததால் இரண்டு, காசநோய் மற்றும் உடல் நலக்குறைவால் எட்டு மான்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். அதேநேரத்தில் உயிரிழந்துள்ள அனைத்து மான்களுக்கும் ஏன் உடல்கூராய்வு செய்யவில்லை?, உணவுக்காக மான்கள் வேட்டையாடப்படுகின்றனவா என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆந்தராக்ஸ் நோயால் மரணம்
இதனிடையே இன்று காலையில் நான்கு மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மான்களின் உடல்களை கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு மானுக்கு ஆந்தராக்ஸ் நோய் தாக்கியுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

நாய்கள் மூலம் நோய் பரவல்
உயிரிழந்த மான்களை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் நாய்கள் மூலம் ஆந்தராக்ஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எனவே ஐஐடி வளாகத்திலும் கிண்டி சிறுவர் உயிரியல் பூங்காவிலும் மான்கள், விலங்குகளின் அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications