வாக்கு சதவீதம் குறைவு- சாட்டையை கையில் எடுத்த மு.க.ஸ்டாலின்- அறிவாலயத்தில் விசாரணை
சென்னை: சட்டசபை தேர்தலில் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்த அதிருப்தியாளர்கள் யார் யார்? என்கிற விவரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டு வருகிறாராம். இந்த அதிருப்தியாளர்கள் மீது வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் நடவடிக்கை பாயுமாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் 72.76% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இந்த வாக்குப் பதிவு சதவீதம் சற்று குறைவுதான்.
மோசமான வாக்கு பதிவு
வாக்கு பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது தொடர்பாக திமுக, அதிமுக தலைமைகள் ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் வாக்கு பதிவு மிக மோசமாக இருந்தது.
ஸ்டாலின் விசாரணை
இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து ஸ்டாலின் விசாரித்தாராம். அத்துடன் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தொகுதிகளின் வாக்கு பதிவு நிலவரத்தை வைத்தும் ஆய்வு நடத்தி இருக்கிறார் ஸ்டாலின்.
சிட்டிங் எம்.எல்.ஏக்கள்
எந்தெந்த சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் குறைந்து இருக்கிறதோ அவர்களுக்கு உடனே போனை போட்டு ஏன் குறைந்தது விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். அப்போது சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தொகுதியில் தேர்தல் பணி செய்யாத அதிருப்தியாளர்கள் பட்டியல் அதிகமாக இருப்பது தெரியவந்தது.
அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை
இதனையடுத்து திமுக போட்டியிட்ட தொகுதிகளில் வேலை பார்க்காத நிர்வாகிகள் யார் யார்? என்கிற பட்டியல் கேட்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யாதவர்கள் யார் யார்? என்கிற பட்டியலும் கேட்கப்பட்டுள்ளதாம். இதனால் திமுகவின் பல ஒன்றிய செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாயும் நடவடிக்கை
கடந்த சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் இதேபோல் திமுகவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அந்த தைரியத்தில் அசால்ட்டாக ஒதுங்கி இருந்த அந்த ஒன்றிய செயலாளர்கள்தான் இப்போது பெரும் பீதியில் இருக்கின்றனராம். போன தேர்தலைப் போல இல்லாமல் இந்த முறை ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.