''நோ மீன்ஸ் நோ..'' மனைவியை கணவர் "உறவுக்கு" கட்டாயப்படுத்த முடியாது.. டிரெண்ட்டாகும் #MaritialRape
சென்னை: திருமண உறவில் நடக்கும் வன்புணர்வு குறித்து டெல்லி உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது டிவிட்டரில் இதுகுறித்து ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் திருமண உறவில் ஏற்படும் வன்புணர்வு குறித்து மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தனர். அப்போது திருமண பலாத்காரத்திற்கு அளிக்கப்பட்ட விலக்குகளை கேள்வி எழுப்பினர்.
திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் உடலுறவுக்கு 'முடியாது' என கணவனிடம் சொல்லலாம். ஆனால் அந்த உரிமையை பெண்கள் இழக்கிறார்கள். முடியாது என்ற பெண்ணிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறினால், உலகெங்கும் ஐம்பது நாடுகளில் இதற்கு எதிராக சட்டங்கள் இருக்கிறது' என்பதை நினைவூட்டி கருத்து தெரிவித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
ராகுல் காந்தி
இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டரில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், பெண்களின் ஒப்புதல் என்பது இந்திய சமூகத்தில் குறைவாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, டிவிட்டரில் #MaritialRape என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை நீதிமன்றங்கள் திருமணத்துக்குப் பிறகு நடக்கும் வன்புணர்வு குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். ராகுல் காந்தியின் ட்வீட்டை ஆதரித்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விவாதம் ட்விட்டரில் நடந்துவருகிறது.
திருமணத்துக்கு பிறகு வன்புணர்வா
திருமணத்துக்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் ஒருமனதோடு உடலுறவில் ஈடுபடலாம். அதுவே அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ உடலுறவில் விருப்பம் இல்லாமல் நடந்தால் அது வன்புணர்வாகவே கருதப்படுகிறது. இதற்கு பல நாடுகளில் சட்டங்களும் இருக்கிறது. உடலுறவுக்கு 'நோ' சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருப்பதை இந்திய நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
டெல்லி உயர்நீதிமன்றம்
'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' என்று கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுபோன்ற ஒரு கருத்தை கேரள நீதிமன்றமும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
திருமண வன்புனர்வு
திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திருமண உறவும், கணவன் மனைவி என்ற பந்தமும் இருந்தாலும் வன்புணர்வு செய்யப்பட்டால் அதுவும் தண்டனைக்கு உரியது என்பதை சட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பதே பெண்களுக்கான நீதி என்று மனுதாக்கல் செய்தவர்கள் தெரிவித்தனர்.
தண்டனைச் சட்டம்
இந்தியாவில் திருமணமாகி வன்புணர்வு நடந்தால் தண்டனை இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 375-வது பிரிவின்கிழ் தண்டனை கிடைக்கும். 'பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக உறவு கொள்வது, பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொள்வது, பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அந்த சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்ணிற்கோ அவரது நெருங்கியவர்களுக்கோ கொலை மிரட்டல் விடுவது, கெடுதல் செய்வதாக பயமுறுத்துவது ஆகியவையும் வன்புணர்வே, மனநிலை சரியில்லாமல் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே, அதேபோல், எதாவது மருந்தின் மயக்கத்தில் அல்லது போதையின் தாக்கத்தில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வுதான்' என்பதை இந்திய தண்டனைச் சட்டம் உறுதி செய்கிறது.