எடப்பாடி முன்னாடி இந்த வார்த்தையை ஒரு முறை சொல்ல முடியுமா?ஆர்பி உதயகுமாருக்கு மருது அழகுராஜ் சவால்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி முன்பு, "கோடநாட்டில் ஜெயலலிதா குடியிருந்த கோவிலில் கொள்ளையடித்து, கொலை செய்த கொலைகாரப் பாவியை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் போட வேண்டும்" என ஆர்.பி.உதயகுமாரை பேசச் சொல்லுங்கள். அவர்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என ஆர்.பி.உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
தீயசக்தி கருணாநிதி என சட்டமன்றத்தில் ஒரே ஒரு முறை ஓ.பன்னீர்செல்வம் சொல்லி விட்டால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவியை அவருக்கு வழங்க நாங்கள் தயார் என ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஆர்பி உதயகுமார், பதவி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத விரக்தியில் இப்படி பேசி வருவதாகவும், மறைந்த தலைவரை விமர்சிப்பது அசிங்கம் என்றும் மருது அழகுராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தீய சக்தி கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை தீய சக்தி என விமர்சிப்பது வழக்கமாக இருந்தது. தற்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசும்போது திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசுவதை ஈபிஎஸ் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம், திமுகவை விமர்சிப்பதில்லை என எடப்பாடி தரப்பினர் குற்றச்சாட்டாக முன்வைத்து வருகின்றனர்.

திமுகவுடன் இணக்கம்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் திமுகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எனது அப்பா கலைஞரின் பரம ரசிகர் என ஓபிஎஸ் சட்டசபையில் பேசியதைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கருணாநிதி பெயரை சொல்லக்கூட ஓபிஎஸ் தயங்குகிறார், அவரை எப்படி அதிமுக தலைமைப் பொறுப்பில் வைப்பது என்றும் ஈபிஎஸ் அணியில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓபிஎஸ்ஸுக்கு உதயகுமார் சவால்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி உதயகுமார், "எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதில் தற்போது போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சவால். சட்டசபையில் ஒரே ஒரு நாள் ஒரு முறை, "தீய சக்தி கருணாநிதி" என ஓ.பன்னீர்செல்வம் கூறினால், அவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பதவி வழங்க நாங்கள் தயார்" என சவால் விடுத்தார்.

மருது அழகுராஜ் பதிலடி
இந்நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், ஆர்பி உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மறைந்துபோன ஒரு தலைவரை மீண்டும் அரங்கத்திற்கு இழுத்து வந்து அவமானமாகப் பேசுவது தவறு. எம்.ஜி.ஆரை, திமுகவினர் இப்போது விமர்சித்தாலும் இந்தக் கருத்து மக்களிடம் இருந்து வரும், மறைந்த தலைவரை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என எதிர்ப்பு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்பி உதயகுமாருக்கு சவால்
அப்படி இருக்கும்போது, மறைந்த தலைவரை இப்போது தீயசக்தி என விமர்சிப்பது சரியானதா? நான் இப்போது சவால் விடுகிறேன். சட்டமன்றத்திற்கு செல்லும் ஆர்பி உதயகுமார், தீயசக்தி கருணாநிதி என சொல்லட்டுமே பார்க்கலாம். கொரோனா இரண்டாம் அலையின்போது, திமுக ஆட்சி மிகச்சிறப்பாக நடக்கிறது என காவடி தூக்கினாரே எதற்காக? அதையெல்லாம் விட்டுவிடலாம்.

எடப்பாடி முன்பு இதை சொல்வாரா?
எடப்பாடி பழனிசாமி முன்பு நின்று ஒரே ஒரு முறை, "கோடநாட்டிலே நம் ஜெயலலிதா குடியிருந்த கோவிலில் கொள்ளையடித்து, கொலை செய்த கொலைகாரப் பாவியை சட்டத்தின் முன் நிறுத்தி சவுக்கால் அடிக்க வேண்டும், சிறையில் போட வேண்டும், தூக்கில் போட வேண்டும்" என ஆர்.பி.உதயகுமாரை பேசச் சொல்லுங்கள். நாங்கள் அவர்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என ஏற்றுக்கொள்கிறோம்.

விரக்தியின் வெளிப்பாடு
எடப்பாடி பழனிசாமி தரப்பைப் பொறுத்தவரை எல்லாமே அறிவிப்போடு நின்று விடுகிறது. திருமணம் முடிந்த மாப்பிள்ளைக்கு முதலிரவு நடக்காவிட்டால் ஏற்படும் நியாயமான கோபம் தான். தனக்கு கிடைத்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் செயல்பட முடியவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே ஆர்பி உதயகுமார் இப்படி பேசி வருகிறார்.

ஜெயலலிதா யாரை நம்பினார்?
திமுகவோடு எந்தக் காலகட்டத்திலும் சமரசம் செய்துகொள்ளாத ஜெயலலிதா, தான் சுமந்த முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அளித்தார் என்றால், அவர் உறுதியாக இருப்பார் என நம்பியதால் தானே? எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என முக்கிய பதவிகளை ஓபிஎஸ்ஸுக்கு தானே நம்பிக் கொடுத்தார் ஜெயலலிதா. திமுகவோடு எந்தக் காலத்திலும் இணக்கமாகச் செல்லமாட்டார் என ஜெயலலிதா எண்ணியதால் தானே கொடுத்தார்? அப்படி ஒரு நம்பிக்கையை எடப்பாடி பழனிசாமியோ, வேறு யாராவதோ பெற்றார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications