சொல்லி 2 வருஷமாச்சு.. இன்னும் அரசியலுக்கு வராத ரஜினி.. ஏமாற்றத்துடன் முடிந்த 2019..!
சென்னை: சிஸ்டமே சரியில்லை என்று அரசியலை ஆரம்பித்த ரஜினி, 2019ல் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக மக்களின் நலனுக்காக கமலுடன் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்தார். அத்துடன் எடப்பாடியெல்லாம் முதல்வரானது அதிசயம் என்று கூறி அதிரவைத்தார். வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள் என்றும் ரஜினி கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மாணவர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினி, அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்றார். தான் அரசியலில் இறங்குவது காலத்தின் தேவை என்று பேசினார். தான் வழக்கமான அறிக்கை அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும், தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்றும் ரஜினி அப்போது கூறினார்.
ஊழல் இல்லாத நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன் என்று கூறினார். தனது இலக்கு 2021 சட்டமன்ற தேர்தல் என்றும் ரஜினி கூறியிருந்தார் ஆனால் இன்று வரை அரசியலில் இறங்குவதற்கான பணிகளை செய்யவில்லை. அதேநேரம் வருடத்திற்கு ஒரு படம் என்று இருந்த ரஜினி, அதன்பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
We miss you Tamilisai: "அப்பா என்கூட பேசலையே".. ஏங்கி தவித்த தமிழிசை.. அவரில்லாமல் தவிக்கும் தமிழகம்
மில்லியன் கேள்வி
எனினும் கட்சி தொடங்குவதற்கு ஏதுவாக ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களை 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ஒருங்கிணைக்க ஆரம்பித்தார். வார்டு வாரியாக தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவதே தனது இலக்கு என ரஜினி அப்போது அறிவிக்கவும் செய்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அவர்களது உற்சாகம் இப்போதும் அதேநிலையில் இருக்கிறதா என்ற மில்லியன் டாலர் கேள்வி தான்.
பேசவும் தடை
ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வேர்களை ஆழமாக செய்து கொண்டிருப்பதாக கூறிக்கொண்டே சுமார் 2 ஆண்டுகளை கடத்திவிட்டார். ஆனால் இன்னமும் கட்சியை தொடங்கவில்லை. சரி கட்சி தான் தொடங்கவில்லை. தன் மன்றத்தை அரசியல் ரீதியாக விமர்சனங்களை முன்னெடுத்து செல்ல அனுமதிப்பார் என்று பார்த்தால் அதற்கு அவர் இதுவரை அனுமதிக்கவில்லை. மன்ற நிர்வாகிகளை அரசியல் பேச தடை விதித்துள்ளார்.
ரஜினி வரவில்லை
ரஜினியும் இதுவரை எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை. அதேபோல் பொதுமக்களின் பிரச்னைக்காக அவர் இதுவரை களத்தில் இறங்கி போராடவில்லை. ரஜினி டிசம்பர் 31ம் தேதி சொன்ன முக்கியமான விஷயம். தேர்தல் என்ற போர் வரும் வரை காத்திருப்போம் என்பது தான். ரஜினி சொன்னது போல் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்தது. ஆனால் அப்போதும் ரஜினி அரசியலை முன்னெடுக்கவில்லை.
என்ன செய்வார்
ரஜினி சொன்ன 2021 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. அதற்குள் கட்சி ஆரம்பித்து, கொள்கையை அறிவித்து, மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை தங்கள் கட்சி என்ன தரும் என்பதையும் அவர் அறிவித்தாக வேண்டும். அத்துடன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாக வேண்டும்.
அத்துடன் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம் என பொறுப்புகளை நியமிக்க வேண்டும், இப்படி பல வேலைகள் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் உடனே செய்தாக வேண்டிய நிலை உள்ளது.
ரஜினி ஆர்வம்
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு தீவிரமாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதே உண்மை. காலாவில் தொடங்கி பேட்ட, தர்பார் என நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்தாக சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது இல்லாமல் இன்னும் ஒரு படத்தில் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார்
எனவே ரஜினி வரும் ஆண்டில் அரசியலில் இறங்குவாரா அல்லது அது கானல் நீரா என்ற மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் எனில் ரஜினி அரசியலுக்கு வராமல் எப்போதும் போல் நடிகராகவே இருந்தால் சிறப்பாக கொண்டாடுவோம். எங்களுக்கு அவர் சூப்பர் ஸ்டாராக மட்டும் இருந்தால் போதும் என்று சொல்லும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ரஜினி பதிலடி
இன்னொரு பக்கம் ரஜினியின் ஒவ்வொரு செயலையும் பாஜக ஆதரவு இருப்பதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜகவுடன் கூட்டு சேருவார் என்று பேச்சும் இருக்கிறது. காரணம் ஆன்மீக அரசியல் என்ற பதத்தை சொல்கிறார்கள். அதேநேரம் காவிக்கு வள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன் என்று ரஜின கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தோல்வியின் போது பாஜக செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறி அதிரவைத்தார்.
ரஜினி விரும்பவில்லை
ரஜினியின் ஓராண்டு செயல்பாடுகளை பார்த்தால் அவர் அதிகாரத்தை எதிர்க்க விரும்பாதது தெளிவாக தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடங்கி, பல்வேறு விவகாரங்களில் ரஜினியின் கருத்து என்பது ஆளும் வர்க்கத்தை நேரடியாக தாக்கும் வகையில் இருக்காது. அல்லது இரட்டை பதமாக இருந்தது.
தாமதிக்க கூடாது
இறுதியாக ஒன்று, ரஜினி அரசியலுக்கு வர விரும்பினால் இனியும் தாமதிக்காமல் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க ரஜினி முன்வர வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை காக்கவும், மாநிலத்தின் வளங்களை காக்கவும் ரஜினி திட்டங்கள் வைத்திருந்தால் அதை செய்ய காத்திருக்க வேண்டிய தருணம் இது அல்ல. அதேபோல், சாதிய கொடுமைகள், மதுவின் கொடுமைகளை எதிர்க்க திட்டம் வைத்திருந்தால் அதையும் செயல்படுத்த ரஜினி காத்திருக்க வேண்டிய தருணம் இது அல்ல. ரஜினி அரசியலுக்கு உண்மையிலேயே வர விரும்பினால் மக்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.