சக்சஸ்! தமிழக அரசு தடை விதித்தும் போராடி வென்ற கூட்டணி கட்சிகள்! அக் 11- க்கு மனித சங்கிலி மாற்றம்
சென்னை: அக்டோபர் 11-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த மனித சங்கிலியை விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், திக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன. இதையடுத்து மனித சங்கிலிக்கு மறுத்து தமிழக அரசு அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமாவளவன், முத்தரசன், கே எஸ் அழகிரி, பாலகிருஷ்ணன், கி வீரமணி, ஜவாஹிருல்லா, தி வேல்முருகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ஆம் தேதி காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தோம்.
புதுச்சேரி, காரைக்காலில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி..பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் நிலையில் எங்கள் மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் இயக்கமும் அன்றைய தினம் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டதால் தமிழக அரசு எங்களது மனித சங்கிலிக்கும் சேர்த்து அனுமதி மறுத்துவிட்டது.
மனித சங்கிலி
ஆர்எஸ்எஸ்ஸும் நாங்களும் ஒன்றல்ல. எனவே சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை எழுந்தது. இதனிடையே அக்டோபர் 2ஆம் தேதி மனித சங்கிலிக்கு காவல் துறை அனுமதி அளிக்காதது குறித்து விளக்கம் அளித்தது.
அக்டோபர் 11 ஆம் தேதி
இதையடுத்து வேறு ஒரு தேதிக்கு மாற்றிக் கொண்டால் அனுமதி வழங்குவதாகவும் காவல் துறை தெரிவித்தது. இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி நடக்கவிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி வரும் அக்டோபர் 11 ஆம் தேதி நடத்தப்படும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.
நெறிமுறைகள்
ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் வழக்கு தொடர்ந்தது. பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளுடன் ஊர்வலத்தை நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தினால் பிரச்சினை ஏற்படும் என கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதியை மறுத்தது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடருங்கள் என ஆர்எஸ்எஸ் வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.