பிஎஃப்ஐ அமைப்புக்கு விரைவில் தடை? பாஜக தொண்டர்கள் பாதுகாப்பாக இருங்கள்.. அண்ணாமலை பேசிய பரபர ஆடியோ!
சென்னை: தமிழக பாஜக தொண்டர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிப்பட்டது.
பெட்ரோல் குண்டுவீச்சு.. தமிழகத்தில் “புல்டோசர்” மாடலா? பாஜக வெளியிட்ட இந்த “போட்டோவை” பாருங்க
பெட்ரோல் குண்டுவீச்சு
இதனைத்தொடர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன.
அண்ணாமலை ஆடியோ
இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களுக்கு பாஜக சார்பாக சில அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதேபோல் பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
பிஎஃப்ஐ-க்கு தடை வருமா?
அந்த ஆடியோவில், மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. டெல்லியில் உள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றால், பாஜக தொண்டர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தொண்டர்களுக்கு எச்சரிக்கை
இதனால் வேலூர், கோவை, கன்னியாகுமரி பகுதிகளில் இந்துத்துவ கொள்கைகளை ஆவேசமாக எடுத்து வைக்கும் தொண்டர்கள், அவர்கள் குறிவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் 2, 3 மாதங்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும். கேரளாவில் இருக்கக்கூடிய தாக்கம், தமிழ்நாட்டிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வராமலும் போக வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.