அன்பகத்தில் அனல் பறக்கும் கேள்விகள்! திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், மாநகர அமைப்பாளர் பதவியிடங்களுக்கு விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
திமுக இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் நேர்காணலில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் நேர்காணல் நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு அவசரமும் காட்ட வேண்டியது வரும் என்பதால் மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனை ஸ்டிராங்காக திமுக பரிந்துரைக்க இதுதான் காரணம்!
திமுக இளைஞரணி
திமுகவில் உள்ள மற்ற அணிகளை காட்டிலும் இளைஞரணியில் பதவிகளை வாங்குவதற்கு அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அந்த அணி இயங்குவதே ஆகும். இதனால் தான் திமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் எப்பாடு பட்டாவது தங்கள் வாரிசுகளை இளைஞரணியில் புகுத்தி விட வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார்கள்.
நேர்காணல் தொடக்கம்
இதனிடையே திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், மாநகர அமைப்பாளர் பதவியிடங்களுக்கு விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் நடத்த ஆரம்பித்துவிட்டார். இன்று தொடங்கிய நேர்காணலில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திரளான இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர். கட்சியில் எப்போதிருந்து உறுப்பினர், என்ன வேலை செய்கிறீர்கள், குடும்பத்தில் யாராவது பொறுப்பில் இருக்கிறார்களா என்பன உள்ளிட்ட பல கேள்விகளை வீசி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
கட்சிப்பணிகள்
அதேபோல் நேர்காணலுக்கு வருபவர்கள் ஆர்வமுடன் தன்னிடம் கொடுக்கும் புரோஃபைல்களை புரட்டி பார்த்து அவர்களது கட்சிப் பணிகளை அறிந்துக்கொள்கிறார் உதயநிதி. திமுக இளைஞரணியில் முடிந்தவரை புது முகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள உதயநிதி, அதற்கேற்றவாறு தனது தேடலை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
துணைச் செயலாளர்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்களான ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு , சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார், ஜோயல் உள்ளிட்டோர் உடனிருக்கின்றனர். இதில் ஜோயல் மட்டும் மடியில் லேப்டாப் ஒன்றை வைத்துக் கொண்டு அதில் சில விவரங்களை பதிவேற்றம் செய்துக் கொள்கிறார்.