கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. உருவாகும் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு.. ஸ்டாலின் அதிரடி
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பிரத்யேகமாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய பிறகு, மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்தப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்!
அதிர்வை ஏற்படுத்திய கோவை கார் வெடிப்பு..
கோவையில் உள்ள உக்கடம் பகுதியில் கடந்த மாதம் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த காரை ஓட்டிச் சென்ற ஜமோசா முபின் என்பவர் பலியானார். இதனிடையே, கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆணி, கோலிக்குண்டுகள் கண்டறியப்பட்டதால் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
களமிறங்கிய என்ஐஏ
இதன்பேரில், முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக முபினின் உறவினர்கள், நண்பர்கள் என 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று தமிழகம் முழுவதும் 42 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த கார் வெடிப்பு சம்பவமானது ஒரு தீவிரவாத தாக்குதல் சதி என்றும் என்ஐஏ அதிகாரிகள் அறிவித்தனர்.
அடையாளம் காணப்பட்ட 90 பேர்
இந்த சூழலில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 பேர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பட்டியல் அளித்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களில் 90 பேரை போலீஸார் அடையாளம் கண்டு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணை சில தினங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு..
இந்நிலையில், தமிழகத்தில் பிரத்யேகமாக மாநிலத் தீவிரவாத தடுப்புப் பிரிவை தொடங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறை கூடுதல் இயக்குநர் அல்லது ஐஜி தலைமையில் இந்தப் பிரிவு அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள், தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே இந்தப் பிரிவின் முதன்மையான பணி எனக் கூறப்படுகிறது.