கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு..மேலும் 3 பேர் கைது..என்ஐஏ விசாரணை
கோவை: கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர்.
கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த முபின் வீட்டிலில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடி மருந்துகளும் சிக்கின.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் பூசாரி எஸ்.சுந்தரேசன் புகாரளித்திருக்கிறார்.

சிக்கிய வெடி பொருட்கள்
இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்றும் வெடிபொருட்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுபவை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

என்ஐஏ வழக்குப்பதிவு
இதனையடுத்து காவல்துறையினருடன் என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் களமிறங்கினர். கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, சென்னை என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிரடி சோதனை
உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையும் நடத்தினர். சென்னை, கோவை, திருப்பூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் 33 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.

6 பேர் கைது
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் 6 பேரும் சென்னை பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

3 பேரை கைது செய்த என்ஐஏ விசாரணை
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகம்மது தாபீக், உமர் பரூக், பரோஸ் கான் ஆகிய 3 பேரை கைது செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications